
கோவை மக்களவைத் தொகுதியைக் கைப்பற்றுவதில் அதிமுக, திமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், அப்பகுதியில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை அப்பகுதி இளைஞர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
கோவை மக்களவைத் தொகுதியில் இடது சாரிகள் 7 முறையும், அதற்கு அடுத்ததாகக் காங்கிரஸ் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜ.க இங்கு 2 முறை வென்று உள்ளது. இம்முறை தமிழ்நாடு பா.ஜ.கத்தலைவர் அண்ணாமலை இங்குக் களம் காண்கிறார். இதனால் தமிழ்நாடு மட்டுமல்ல தேசிய அரசியலும் கோவை தொகுதியின் முடிவுகளைப் பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
கோவையில் தி.மு.க வேட்பாளரான கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க மேயராக இருந்தவர். காங்கிரஸும் இந்தத் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டது. இடது சாரிகளுக்கும் வாக்கு வங்கி கணிசமாக இருக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் பெற்றி பெற்று பாஜக.வின் வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நிலையில், கோவையில் பாஜக சற்று வலுவாக இருப்பதாகக் கருதபப்டுகிறது. அ.தி.மு.க வும் கோவையைத் தங்களது வலுவான பகுதியாக உருவாக்கி வைத்து உள்ளது. கோவை மக்களவைத் தொகுதியில் வெல்லப் போவது யார்? என்பது கணிக்க முடியாத யூகத்துக்குரிய தொகுதியாக உள்ளது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் சார்பில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, துடியலூர் பகுதி 15 வது வார்டு பொது மக்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுக்கும்போது அவர்களை அப்பகுதி இளைஞர்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.



