
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தான் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லையென வாக்குச்சாவடி வரை சென்ற நடிகர் சூரி ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக வேதனையுடன் தனது பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
18வது மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாகத் தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
ஒரு சில இடங்களில் மட்டும் வாக்கு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்ட போதும் உடனடியாக அது சரி செய்யப்பட்டு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் வாக்களிக்கச் சென்ற போதும் தனது ஜனநாயக கடமையை ஆற்ற முடியாமல் இருப்பது மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாகக் குற்றம் சாட்டி நடிகர் சூரி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தற்போது நடந்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்காக நடிகர் சூரி தனது மனைவியுடன் சென்றார். அவரது மனைவி வாக்களித்து நிலையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்த தேர்தல் அதிகாரிகள் அந்தப் பட்டியலில் நடிகர் சூரியின் பெயர் விடுபட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
மனைவிக்கு அனுமதி: நடிகர் சூரியின் மனைவியின் பெயர் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் நிலையில் அவர் மட்டும் வாக்களிக்கத் தேர்தல் அதிகாரிகள் அனுமதித்த நிலையில் நடிகர் சூரியை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வந்த நடிகர் சூரி வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் .
வீடியோவில் வேதனை: 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காகத் தான் வாக்களிக்க வந்ததாகவும், ஆனால் வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயர் நீக்கப்பட்டதாகவும். இதனால் தான் வாக்களிக்க முடியாமல் போனது வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாகவும், கடந்த தேர்தல்களில் வாக்களித்து நிலையில் தற்போது ஏன் தனது பெயர் பட்டுப் போனது, இது யாருடைய தவறு எனத் தெரியவில்லை. இருந்தபோதும் 100% வாக்குப்பதிவு நிறைவேற்ற முடியவில்லை ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை என்ற வேதனையோடு இருந்தாலும் அனைவரும் வாக்களித்து 100% தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாக அந்த வீடியோவில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார். சூரி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்களும் புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.




