Koothur Dargah: சாதி, மதம் பேதமின்றி கறி சோறு.. 200 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரியம்!

Advertisements

நாகை அருகே கூத்தூர் தர்கா ஷரீபில்  200 ஆண்டுகளுக்கு மேலாக  நடைப்பெறும் ஆபத்து சோறு என்றும் கறி சோறு வழங்கும் விழாவை முன்னிட்டு  நாள் முழுதும் சாதி, மத பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான பொது மக்களுக்குக் கறி சோறு வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் குருக்கத்தி பிரதான சாலையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக அடக்கம் ஆன  பீர்காயபு ஒலியுல்லாஹ், சித்திக் முகம்மது ஷகீது ஒலியுல்லாஹ், ஜெர்மன் பீவி அம்மா ஒலியுல்லாஹ் ஆகியோரின் தர்ஹா ஷரீபில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு காலரா பெரு நோய் தொற்று காலத்தில் பொது மக்களை இந்தத் தர்காவில் தங்க வைத்து உணவு சமைத்து கொடுத்து நோயை விரட்டியதாக நம்பிக்கை உள்ளது.

அதன் தொடர்ச்சியாகப் பாரம்பரியமாக 200 ஆண்டுகளாகப் பொது மக்களிடம் உணவு பொருட்களைப் பெற்று பொது மக்களுக்கு ஆபத்து மவுலுது எனப்படும் ஆபத்து  சோறு வழங்கப்பட்டு வருகிறது. ரம்ஜான் நோன்பு ஆரம்பிக்கும் முன்பு  நடைப்பெறும் இவ்விழா இன்று நடைப்பெற்றது. இரவில் ஆடுகள் வெட்டப்பட்டு கறி சோறு சமைத்து  மௌலுது ஷரீப் எனபடும் பிரார்தனை நடைப்பெற்று அதிகாலை முதல்  நாள் முழுவதும் கறி உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் சுற்று வட்டார கிராமங்களைச்  சேர்ந்த 5000 த்துற்கும் மேற்பட்ட பொது மக்கள் சாதி, மத பாகுபாடின்றி ஆபத்து சோறு என்னும் கறி சோறு சாப்பிட்டு சென்றனர். இதுகுறித்து தர்கா நிர்வாகத்தினர் கூறும்போது ஆண்டுதோறும் நடைப்பெறும் ஆபத்து சோறு விழாவில் கறி சோற்றை பாத்திரங்களில் வீடுகளுக்குக் கொண்டு செல்லக் கூடாது என்றும் நாள் முழுதும் மக்களுக்குக் கறி சோறு போடுவதாகத் தெரிவித்த அவர்கள் கொரோனா காலக்கட்டத்தில் இது போன்று ஆபத்து சோறு சமைத்து போட்டதால் தங்கள் கிராமங்களில் ஒருவருக்கு கூடக் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *