
அண்மையில் வெளியான ஆப்பிள் 15 சீரிஸ் ஐபோன்களை கொள்ளையடிக்க முகமூடி மற்றும் துப்பாக்கியுடன் சென்ற கும்பல் வசமாகப் போலீசாரிடம் சிக்கியது.
ஸ்மார்ட்போன்களிலேயே மிகவும் விலை உயர்ந்ததாகவும், ஆடம்பரத்தை காட்டுவது ஆப்பிள் ஐபோன். விலை அதிகமாக இருந்தாலும் அதில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் மற்றும் அப்ளிகேஷ்ன்ஸ்களுக்காகவே ஐபோன்களை பெரும்பாலானோர் விரும்புவதுண்டு. தனி பிராண்டாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் அப்டேட் வெர்ஷன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஐபோன் 15 சீரிஸ் வெர்ஷனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.
உலகம் முழுவதும் வெளியான ஆப்பிள் 15 ஐபோன் சீரிஸ் மாடலை வாங்க வாடிக்கையாளர்கள் போட்டி போட்டனர். சில விற்பனை நிலையங்களில் ஐபோன்கள் விற்று தீர்ந்ததால், ஒருசிலர் ஐபோன் வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மொத்தமாக ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என 4 சீரிஸ்களில் ஆப்பிள் போன் விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவில் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டிபோட்டுக் கொண்டு ஆப்பிள் போன்களை வாங்கிய வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டானது.
இந்த நிலையில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் இருக்கும் ஆப்பிள் ஐபோன் விற்பனை நிலையங்களில், முகமூடி அணிந்தபடி புகுந்த சிலர் ஐபோன் 15 மாடல்களைக் குறி வைத்துத் திருடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் 20 பேரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 15 கொள்ளையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை ஈடுபட்டுள்ளதாகவும், இதில் 200க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


