
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் ஒரு கிணற்றில் கழிவுநீர் கலந்த நீரைக் குடித்ததால் குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 60 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிந்த்வாரா மாவட்டத்தில் ரஜோலா என்னும் ஊரில் உள்ள 150 குடும்பத்தினர் ஒரு கிணற்றில் தண்ணீர் எடுத்து அருந்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நீரைக் குடித்தவர்களில் 60 பேருக்குக் குமட்டலும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடனடியாக மாவட்ட அதிகாரிகள் அங்குச் சென்று அந்தக் கிணற்றில் நீர்மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். அதில் அந்த நீர் குடிக்கத் தகுதியில்லாத அளவுக்கு மாசுபட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அந்தக் கிணற்றில் 4 புறாக்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி வருவதாகவும் கோட்டாட்சியர் ஹேம்கரன் துர்வி தெரிவித்துள்ளார்.
கவனக்குறைவாகச் செயல்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



