
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் சதம் அடித்ததன் மூலமாக இந்தியா 245 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பாக்ஷிங் டே டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே கனமழை பெய்திருக்கிறது. இதன் காரணமாக மைதானத்தில் அதிகப்படியான ஈரப்பதம் இருந்த நிலையில், டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அரைமணிநேரம் தாமதமாக டாஸ் போடப்பட்டது.
இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா மைதானம்குறித்து நன்கு அறிந்த நிலையில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
எனினும், கேஎல் ராகுல் நிலையாக நின்று டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14ஆவது அரைசதத்தை கடந்து விளையாடினார். முதல் நாளில் 59 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை மற்றும் லேசான மழையின் காரணமாகப் போட்டியானது முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு நேற்று இரவு முழுவதும் போட்டி நடக்கும் செஞ்சூரியன் மைதானத்தில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக இன்று நடக்கும் போட்டியானது தாமதமாகத் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே ஈரப்பதம் காரணமாகப் போட்டியானது தாமதமாகத் தொடங்கப்பட்டது. இதில், நேற்று வரையில் ரன்கள் அடிக்காத சிராஜ் இன்று 5 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 70 ரன்களில் இருந்த கேஎல் ராகுல் தொடர்ந்து பவுண்டரியும், சிக்ஸரும் விளாசிய ராகுல் 133 பந்துகளில் சிக்ஸர் அடித்துத் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராகத் தனது 2ஆவது சதம் அடித்துச் சாதனை படைத்தார்.
மேலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். எனினும், அவர் 137 பந்துகளில் 14 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.


