
ஓட்டலில் தங்கியிருந்த ஜோடிமீது தாக்குதல் நடத்தி பெண்ணைமட்டும் இழுத்து சென்று பலாத்காரம் செய்த கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூர்: கர்நாடகா மாநிலம், ஹனகல் பகுதி அருகே தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு 40 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவரும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரும் கடந்த 8 ஆம் தேதி ஒன்றாக அறை எடுத்துத் தங்குவதற்காக வந்துள்ளனர். இருவரும் ஓட்டலுக்கு சென்றபோது வெளியே இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், இதைக் கவனித்து தனக்குத் தெரிந்த நபர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உடனே ஓட்டலுக்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், இருவர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து, உள்ளே இருந்த இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அந்தப் பெண்ணையும் உடன் இருந்த நபரையும் தங்கள் பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆளில்லா இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அந்த ஆறு பேர் கொண்ட கும்பல், அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்தப் பெண்ணுக்குப் பணம் கொடுத்துச் சொந்த ஊருக்குச் சென்றுவிடுமாறு அந்தக் கும்பல் அனுப்பியுள்ளது.
ஓட்டல் அறைக்குள் புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலை, தங்கள் செல்போனில் வீடியோவாகவும் அந்தக் கும்பல் எடுத்துள்ளது. தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பரவியதையடுத்து, இந்தச் சம்பவம்குறித்து ஹனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அஃதப் மக்பூல் அஹமது சந்தன்கட்டி (24), சமாயுல்லா லாலனாவர் (23), முகமது இசாக் மண்டக்கி (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாகியிருக்கும் மேலும் 3 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம், தாக்குதலுக்கான காரணம்குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஆறு பேர்மீதும் கூட்டு பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தல், தாக்குதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்தக் கும்பல்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


