
என்.எல்.சி (NLC) பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடசேன் சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள பதிவில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC) நாட்டின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் முதுகெலும்பாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே 72 விழுக்காடு பங்குகளை மட்டுமே கொண்டுள்ள அரசு, இப்போது கூடுதலாக 3 விழுக்காடு பங்குகளை விற்பது கண்டிக்கத் தக்கது எனத் தெரிவித்துள்ளார். அரசின் இந்தச் செயல் நாட்டின் எரியாற்றல் பாதுகாப்பு, இறையாண்மை, சமூக நீதி ஆகியவற்றைக் கேள்விக்குறியாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய நிலக்கரிச் சுரங்கத் துறை அமைச்சர் கிசன் ரெட்டிக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


