
ஆற்றுக்குள் தலைகுப்புற பேரூந்து கவிழ்ந்தகோர விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் படுகாயமடைந்த 22 பேரைப் போலீசார் மீட்டு நேபாள் கஞ்சில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
காத்மாண்டு: நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபாள் கஞ்சிலிருந்து காத்மாண்டுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பஸ் பாலத்திலிருந்து ராப்தி ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பலியானவர்களில் 8 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களான பீகாரை சேர்ந்த யோகேந்திரராம் (வயது 67) மற்றொருவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முனே (வயது 37) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்துபற்றித் தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு நேபாள் கஞ்சில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும் போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்துபற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் பஸ் டிரைவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




