
வரதட்சணை கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை குறித்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த டாக்டர் ஷஹானாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். பெண்ணின் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்ணின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் மேலும் ஒரு இளம் மருத்துவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் முதுநிலை மருத்துவ மாணவரான சஹானா அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

திருமணம் செய்வதற்கு காதலனின் குடும்பத்தினர் தங்கம், நிலம், கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக வழங்கவேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த இளநிலை மருத்துவர் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிந்து வந்த அவருடைய தந்தை அண்மையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவ மாணவியின் தற்கொலை குறித்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


