
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசியில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது.
இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை ஆவர். இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களாகும்.
செண்பகப்பொழில் தென்காசி ஆன கதை:
முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.
கோவில்:
கி.பி. 1445-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, கி.பி. 1446-ல் சுவாமி மற்றும் அம்மன் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டன.
சிறப்பு:
ஓலக்க மண்டபத்தில் கற்றூணில் அற்புதச்சிலைகள்.பரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோயிலை கட்டும்போது 8 விநாயகர் கோயில்களையும், 8 திருமடங்களையும் அமைத்தார்.இந்த கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசி கொண்டே இருக்கும்.
திருப்பணிகள்:
கி.பி.1524-ல் திருவாங்கூரைச் சேர்ந்த ஜெயதுங்க நாட்டு மன்னர் சங்கரநாராயண பூதல வீரமார்த்தாண்ட ராமவர்மன் என்ற சிறைவாய் மூத்தவரால் செப்பனிடப்பட்டு பிரம கலசாபிசேகம் நடத்தப்பட்டது.
இராஜகோபுரம்:
கி.பி.1456-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, கி.பி.1462-ல் குலசேகர பாண்டியரால் முற்றுவிக்கப்பட்டது.(பரக்கிரம பாண்டிய மன்னர் காலமான பின்பு அவரது தம்பி)
கோபுர அமைப்பு:
உயரம்: 175 அடி 9 நிலை
நீளம்: வடக்கு – தெற்கு -110 அடி
அகலம்: கிழக்கு-மேற்கு- 84 அடி
இக்கோபுரத்தின் சிறப்பு ” இக்கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும் பாதி பகுதி நுழைந்தபின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசுகிறது. இது போன்ற சிறப்பு வேறெந்த கோவிலிலும் கிடையாது.
மொட்டைக் கோபுரம்:
கி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீ வாய்க்கப்பட்டு மொட்டையாய், இருகூறாய் பொலிவிழந்து நின்றது. 1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1963-ல் இராஜகோபுரத்திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.
சிற்றாறு எனும் ஆற்றங் கரையில் ஆலயம் உள்ளது. ரதிதேவி, மன்மதன், தமிழணங்கு சிலைகள் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டுள்ளன. நவாப் ஆட்சிக் காலத்தில், அரசாங்க ஆவணங்கள் ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்தன. தென்காசிப் பாண்டியர்கள் பற்றிய கல்வெட்டுகள் இக்கோயிலில் அமைந்துள்ளன.


