
10 வருடம் ஆட்சியில் இருந்தபோது கட்சதீவை பற்றிப் பேசாதவர்கள் தற்போது கட்சதீவைப் பற்றிப் பல்வேறு பொய்களைக் கூறி அரசியல் செய்து வருகின்றனர் எனத் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு ஆதரவாகத் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தென்காசி நகரப்பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தாலே தெரிகிறது அவரது வெற்றி உறுதி எனவும், இந்தத் தேர்தல் உண்மைக்கும் பொய்க்குமான தேர்தல். பாஜக எந்த வாக்குறுதிகள் கொடுத்தாலும் நிறைவேற்றாது. அப்படி பட்ட பாஜகவுடன் சிலர் கூட்டணி வைத்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி ஏமாறுபவர்களை நம்பி நாம் ஒட்டு போட்டால் நமது ஒட்டு வீணாகும்.
இந்த ஆட்சி ஒரு கோமாளி கூட்டமாக மக்களை நினைக்கும் ஆட்சி. விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யாத மோடி, கார்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.68 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ளார்கள்.
விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையின மக்கள் உள்ளிட்டோர்களுக்கு எதிராகப் பல்வேறு சட்டங்களைப் பாஜக கொண்டு வந்த நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக தான்.
மோடி அரசு ஒரு ஸ்டிக்கர் அரசு. சாதரண மக்களை வஞ்சிக்கும் ஒரு அரசு பாஜக. தமிழக மக்கள் பல்வேறு கஷ்டங்களைப் பட்டபோது கண்டு கொள்ளதா மோடி, தற்போது திடீர் பாசம் வந்தது போல் தேர்தல் வந்து விட்டதால் அடிக்கடி வருகிறார்.
தமிழ் நீங்கள் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் தேர்தலுக்குப் பிறகு நீங்கள் சும்மா இருக்கின்ற காலத்தில் தமிழகத்திலிருந்து நல்ல ஆசிரியர்களை அனுப்பி வைக்கிறோம்.
10 வருடம் ஆட்சியில் இருந்தபோது கட்சதீவை பற்றிப் பேசாதவர்கள் தற்போது கட்சதீவைப் பற்றிப் பல்வேறு பொய்களைக் கூறி அரசியல் செய்து வருகின்றனர்.
அனைத்து மதத்தினரையும் ஒரே தளத்தில் வைத்துப் பார்க்கக்கூடியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.
இந்தியா கூட்டணி ஆட்சி மத்தியில் வரும்போது கியாஸ் விலை 500 ரூபாயாகவும், பெட்ரோல் விலை ரூ.75 ஆகவும் குறைக்கப்படும்.
மேலும், நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகள் மூடப்படும்.தமிழகத்தில் உள்ள காலை உணவு திட்டத்தைப் போல், கனடா நாட்டில் காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது வரவேற்கதக்கது. அனைத்து அரசிற்கும் முன்னுதாரணமாக உள்ளது நமது திராவிட மாடல் ஆட்சி.
தேர்தல் முடிந்தவுடன் இந்தப் பகுதி மக்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு தொழிற்சாலை நிறுவத் தமிழக முதல்வர்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

