
கள்ளக்குறிச்சியில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு தந்த காவலர் பிரபு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் கரியாலூர் காவல் நிலையம் உள்ளது.
இந்தக் காவல் நிலையத்தில் பிரபு என்பவர் தனிப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வருகிறார். கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாகப் பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பெட்டிக்கடைக்குச் சென்ற தனிப்பிரிவு காவலர் பிரபு, அங்குத் தனிமையில் இருந்த பெட்டிக்கடை உரிமையாளரின் பெண்ணிடம், தகாதவகையில் பேசிப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்தாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு, விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் உமாவிடம் இது குறித்துப் புகார் அளித்தனர்.
பின்னர், கரியாலூர் தனி பிரிவு காவலர் பிரபு மீது போக்ஸோ மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட கரியாலூர் காவல் நிலையக் காவலர் யுவராஜ் வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



