Justice SM Subramaniam: தீர்ப்புத் தேதியைக் குறித்த நீதிமன்றம்!

Advertisements

பஞ்சமி நிலம் தொடர்பான வழக்கில்  அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பளிப்பதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அறிவித்தார்.

திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான “முரசொலி”-யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் எனப் பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார்மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி  மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் P.வில்சன் ஆஜராகி, பஞ்சமி நிலம் அல்ல என அரசு அறிக்கை அளித்ததால், புகாரை முடிக்க முடிவெடுத்துள்ளதாக ஆணையம் கூறியதாகவும், ஆனால் திடீரெனப் புகார் நிலுவையில் தான் உள்ளதாகவும் குறிப்பிட்டார். பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்களைப் புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அரசியல் காரணத்திற்காகத் தேசிய எஸ்.சி. ஆணையம் இந்தப் புகாரை நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குறிப்பிட்டார். ஆணையம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும், பஞ்சமி நிலமா இல்லையா என வருவாய் துறை தான் விசாரிக்க முடியுமே தவிர,  தேசிய எஸ்.சி. ஆணையம் தலையிட முடியாது எனத் தெரிவித்தார்.

தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் A.R.L.சுந்தரேசன் ஆஜராகி பட்டா மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை உரிமையாளரை முடிவுசெய்வதற்கான இறுதியான ஆதாரம் அல்ல எனவும், ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க கூடாது எனவும், தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

புகார்தாரர் சீனிவாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி, வழக்கு நிலுவையில் இருந்தபோது பட்டா வழங்கப்பட்டதாகவும், அதனால் ஆணையம் விசாரணை செய்வது சரியானது தானெனத் தெரிவித்தார். வில்லங்க சான்றிதழில் 1974ல் மாதவன் நாயர் பெயரோ, அஞ்சுகம் பதிப்பகம் பெயரோ இல்லை என்றும், திருவண்ணாமலை நிலம் தொடர்பாகத் தான் உள்ளதாகத் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பளிப்பதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அறிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *