
கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை முன்னிறுத்தும் வகையில் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா” என்ற மிகப்பெரிய விழா பிப்ரவரி 27 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது.
இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நேற்று நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் எழுத்தாளர் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் முத்தையா தெரிவித்ததாவது:-
சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழ் மொழியின் செழுமை, தமிழ் மண்ணின் கலாச்சாரம், வீரம், கலைகள், வரலாறு, உணவுப் பழக்கங்கள், வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டின் தொன்மையை கொண்டாடும் வகையில் ‘தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா’ 2023-ஆம் ஆண்டு முதல் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டில் ‘தமிழ்த் தெம்பு திருவிழா’ நடைபெற உள்ளது.
தமிழ் மொழியின் செழுமை, தமிழ் அரசர்களின் ஆளுமை, தமிழ் வளர்த்த அடியார்களின் பக்தி, காலத்தால் அழியாத தமிழரின் கட்டிடக்கலையின் நுட்பம், இயற்கையோடு இணைந்து வளர்ந்த சித்த மருத்துவம், அகிலமே பார்த்து வியக்கும் ஆலயங்கள் ஆகியவற்றின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் 24 கண்காட்சி அரங்குகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இந்தத் திருவிழாவில் நாட்டின் மாடுகள் மற்றும் குதிரைகளின் கண்காட்சியும் நடைபெற உள்ளது. மேலும், தமிழகத்தில் முதன்முறையாக மிகப்பெரிய அளவில் ஆதியோகி முன்பு மார்ச் 7 முதல் 9 ஆம் தேதிவரை ‘நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தை’ நடைபெறவுள்ளது.
நமது தமிழ் பண்பாட்டில் நிகழ்த்து கலைகள் எளிய மக்களின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும், வாழ்வியல் வரலாற்றின் பதிவுகளாக, உடல் மற்றும் மன ஒத்திசைவின் உச்சமாக வளர்ந்துள்ளன.
இன்றைய காலத்தில் இந்தக் கலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இப்போட்டிகள் 16 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இரண்டு பிரிவுகளில் நடைபெறும். இதில் பங்கேற்று வெற்றி பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
தமிழர்களின் போர்க்கள உத்திகள் மட்டுமல்லாமல், ஆடுகளத்தில் நடைபெறும் விளையாட்டுகளும் வீரத்தால் நிறைந்தவை. அந்த வகையில், கொங்குநாட்டின் வீர விளையாட்டான ‘ரேக்ளா பந்தயம்’ மார்ச் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்குப் பிறகு, பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்று மகிழ்வதற்காகக் கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் மெகா இராட்டினங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
