
உலகம் முழுவதும் நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கிறிஸ்தவ சமுதாயத்து மக்கள் இந்நாளில் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக அளிப்பதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர் என்று கிறிஸ்துவ சமுதாயத்தினரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். இதேபோல், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை மட்டுமே போதித்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஸ்டர் திருநாளில் நாம் அனைவரிடத்திலும் அன்பு கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.



