
ஈரானிய ராணுவம் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையாவிட்டால் மரணத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் சரியானவை என்றும் இரத்தவெறி கொண்ட பயங்கரவாத ஆட்சியை ஒருபோதும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதற்கு அவை அவசியம் என்றும் தெரிவித்தார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, இந்த தீய தீவிரவாதிகள் உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றார். நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானிய ஆட்சி அதனை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார். இந்த அச்சுறுத்தல்கள் இனி தொடராது என்றும் புரட்சிகர காவல்படை, ஈரானிய ராணுவம் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பொதுமன்னிப்பை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு மறுத்தால் நிச்சயம் மரணத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அனைத்து ஈரானிய தேசபக்தர்களும் இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு தங்கள் நாட்டைத் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


