
குருகிராம்:
இன்ஸ்டா பிரபலம் ஆர்ஜே சிம்ரன் என்பவர் உடல் நேற்றைய தினம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் இப்போது தற்கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. சின்ன சின்னப் பிரச்சினைக்கும் கூட எமோஷ்னல் ஆகி இதுபோலத் தேவையற்ற முடிவுகளைச் சிலர் எடுக்கிறார்கள்.
தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை என்ற போதிலும் சில நேரங்களில் இதுபோல நடந்துவிடுகிறது. இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
இன்ஸ்டா பிரபலம்:
இன்ஸ்டாகிராமில் சுமார் 7.5 லட்சம் பாலோயர்களை கொண்ட பிரபலம் உயிரிழந்த நிலையில், அவரது உடல் அவரது அப்பார்ட்மெண்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த இவர் ஃப்ரீலான்ஸ் ரேடியோ ஜாக்கியாகவும் இருக்கிறார். இவரது பெயர் சிம்ரன் சிங். 25 வயதான இவர், இன்ஸ்டாகிராமில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பார். இவரது ரசிகர்கள் இவரை ஆர்ஜே சிம்ரன் என்றே அழைப்பார்கள்.
குருகிராமில் உள்ள அவரது வீட்டில் அவர் சடலமாகக் கண்டறியப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. அவர் கடைசியாக டிசம்பர் 13 அன்று ஒரு ரீல்ஸை தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதன் பிறகு எந்தவொரு போஸ்டும் போடாமல் இருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் உயிரிழந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
போலீஸ் சொல்வது என்ன:
இது தொடர்பாகப் போலீசார் கூறுகையில், “அவர் குருகிராம் செக்டார் 47ல் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து அதில் தங்கி இருந்தார். அதில் தான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது” என்றனர். அவருடன் தங்கியிருந்த ஒரு நண்பரை இப்போது போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஷாக் தகவல்:
அவர் தங்கியிருந்த வீட்டைப் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இதுவரை லெட்டர் எதுவும் கிடைக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாகச் சிம்ரனின் குடும்பத்தினர் இதுவரை போலீஸில் புகார் அளிக்கவில்லை என்றே தெரிகிறது. இருப்பினும், சிம்ரனின் சமீபத்திய செயல்பாடுகளால் அவரது குடும்பத்தினர் அவர்மீது கோபத்தில் இருந்தார்களாம். இதனால் சில காலமாகவே சிம்ரன் மனமுடைந்து இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரது உடல் இப்போது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜம்முவை சேர்ந்த சிம்ரனை ஜம்முவின் இதயத்துடிப்பு (Jammu Ki Dhadkan) என்றும் கூட நெட்டிசன்கள் அழைப்பார்கள். ஜம்முவிலிருந்து வந்து இன்ஸ்டா பிரபலமாக மாறிய சிம்ரனின் உயிரிழப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை… தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e – 022-25521111 (Mon – Sat, 8am – 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

