
நகர்ப்புறப் பகுதிகளில் குடிநீர், வடிகால் வசதிகள் செய்வது, சாலைகளைச் சீரமைப்பது ஆகியவற்றில் அரசுத் துறைகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்று மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நீர் வழங்கல் பொறியியல் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது நகர்ப்புறப் பகுதிகளில் அம்ருத் திட்டத்தில் குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர்க் குழாய்கள் பதிப்பதற்கு கான்கிரீட் சாலைகள் உடைக்கப்படுவதாகவும், பணிகள் முடிந்தபின் அவற்றை முழுமையாகச் சீரமைக்காமல் விட்டுச் செல்வதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய பணிகளில் பல்வேறு துறைகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பணிகள் முடிந்த பின் அந்த இடத்தைச் சீரமைப்பதற்கு எந்தத் துறையும் முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை எனத் தெரிவித்தார்.
சாலைப் பணிகளை முடித்தால் குறைந்தது ஐந்தாண்டுகளுக்குள் சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று உறுதியளிக்கப்பட வேண்டும் என்றும் நிதின் கட்கரி கூறினார்.



