
இந்தியா, நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக உடன்பாடு நாளை கையொப்பமாக உள்ளதாக வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து இடையான தடையற்ற வணிக உடன்பாடு குறித்த பேச்சுக்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தன. அதன்பின் நான்கு மாதங்கள் கடந்த நிலையில் இரு நாடுகளிடையான தடையற்ற வணிக உடன்பாடு நாளை கையொப்பமாக உள்ளது.
இந்த உடன்பாடு கையொப்பமானால் இந்திய நிறுவனங்கள் தங்கள் பொருட்களை வரியின்றி நியூசிலாந்து சந்தைகளில் விற்க முடியும். அதேபோல் அடுத்த 15 ஆண்டுகளில் இரண்டாயிரம் கோடி டாலர் முதலீட்டை நியூசிலாந்தில் இருந்து பெற முடியும். இந்த உடன்பாட்டின் மூலம் இந்தியர்களுக்குத் தற்காலிக வேலைவாய்ப்பு விசாக்கள் கிடைக்கும்.
தில்லி பாரத மண்டபத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியத் தொழில் வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நியூசிலாந்து வணிகம் முதலீட்டுத்துறை அமைச்சர் தாட் மெக்கிளே ஆகியோர் இதற்கான உடன்பாட்டில் கையொப்பமிட உள்ளனர்.
இதற்காக இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அமைச்சர் இன்று ஆக்ராவில் தாஜ்மகாலைக் கண்டுகளித்தார்.


