
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், இதுபற்றிப் பிரதமர் மோடி வாய் திறக்காமல் உள்ளதாகக் காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிகழ்ந்த சண்டையைத் தான் தலையிட்டு நிறுத்தியதாக ஏற்கெனவே டிரம்ப் கூறியிருந்தார்.
இதற்குப் பிரதமர் மோடி பதில் ஏதும் கூறவில்லை. இந்நிலையில் தனது நல்ல நண்பனான இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடுவதாக உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்துச் செய்தியாளரிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், டிரம்பின் பேச்சை மேற்கோள் காட்டியுள்ளார்.
இதுபற்றிப் பிரதமர் நரேந்திர மோடி வாய் திறக்காமல் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். இதேபோல் சீனாவுடனான இந்தியாவின் வணிகப் பற்றாக்குறை முந்தைய ஆண்டில் ஏப்ரல் – செப்டம்பர் வரையான அரையாண்டில் 4960 கோடி டாலராக இருந்தது இந்த ஆண்டில் அதே காலத்தில் 5440 கோடி டாலராக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.




