
சென்னை ஆவடி அருகே இந்துக் கல்லூரி ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கு காத்திருந்த பயணிகளைக் கஞ்சா போதையில் கல்லூரி மாணவர்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்துக் கல்லூரி ரெயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் சிலர் ரெயில் நிலைய நடைமேடையில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகளை பிடுங்கி கையில் சுத்திக்கொண்டே செல்கின்றனர். அப்போது ரெயிலுக்கு காத்திருக்கும் சில பயணிகளையும் கல்லூரி மாணவர்கள் போதையில் தாக்குகிறார்கள்.
ரெயிலுக்காகக் காத்திருந்த பயணிகளை வயது வித்தியாசம் பாராமல், கண்மூடித்தனமாகத் தாக்கும் காட்சிகள் பார்ப்போரை அச்சமடையச் செய்துள்ளது.
கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், பயணி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களைத் தாக்கிய போதை இளைஞர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறுவன் உள்பட 3 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். சுபாஷ் (20), இப்ராஹிம் (23) மற்றும் 14 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

