
வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் வகையில் வங்கதேச இடைக்கால அரசின் முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவின் நில சுங்க நிலையங்களை பயன்படுத்தி விமான நிலையம், துறைமுகத்தை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வங்கதேசம் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு நிறுத்தியது. இதனால் வங்கதேசத்தின் தொழிலதிபர்கள் கதற தொடங்கி உள்ள நிலையில் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் நம் நாட்டிடம் மீண்டும் அனுமதி கோரி கெஞ்சி வருகின்றனர்.
இதற்கிடையே தான் முகமது யூனுஸ் சீனா சென்று அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தேவையின்றி நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை இழுத்து பேசியது சர்ச்சையானது. சீனாவில் முகமது யூனுஸ் பேசுகையில், ‛‛வங்கதேசம் என்பது முதலீட்டுக்கு சிறந்த நாடாக உள்ளது. கடல்வழி போக்குவரத்து வங்கதேசத்தில் உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க நிலத்தால் சூழப்பட்ட பகுதி. இங்கிருந்து கடலை அடைய முடியாது.
வங்கதேசத்துக்கு முதலீடு கொண்டு வரும் முயற்சியாக முகமது யூனுஸ் தேவையின்றி இந்தியாவை இழுத்து பேசியது சர்ச்சையானது. இதன்மூலம் வங்கதேசத்தில் தொழில் முதலீடு செய்தால் நேரடியாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தலாம் என்பதை தான் அவர் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நம் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து வங்கதேசத்தின் இந்த வாய்ச்சவடாலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‛‛நம் நாட்டின் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தி வணிகம் செய்ய வங்கதேசத்துக்கு நில சுங்க நிலையங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இதனால் விமான நிலையம், துறைமுகங்களில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. சரக்குகளில் தேக்கம் ஏற்பட்து. இதையடுத்து வங்கதேசத்துக்கான அனுமதி கடந்த 8 ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். இப்படி இந்தியாவிடம் தொழிலதிபர்கள் கெஞ்ச தொடங்கி உள்ள நிலையிலும் முகமது யூனுஸ் மட்டும் திருந்தவேயில்லை. தொழிலதிபர்கள் பிரச்சனையை சந்தித்தால் என்ன? எனது குறிக்கோள் இந்தியாவை எதிர்ப்பது மட்டும் தான் என்ற பாணியில் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் அந்தநாட்டின் தொழில்கள் முடங்கி உள்ளது. இப்போது இந்தியாவும், வங்கதேச தொழிலதிபர்களுக்கு செக் வைத்துள்ளது. இதனால் விரைவில் தொழிலதிபர்கள் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்க்கு எதிராகதிரும்பலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
