
2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகத்தையே முடக்கிப் போட்டது. லட்சக்கணக்கான உயிரிழப்புகள், கோடிக்கணக்கில் பொருளாதார இழப்புகள் என ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்தது. இந்த பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டு வந்த நிலையில், மீண்டும் அச்சுறுத்துகிறது. கொரோனா. இந்த நிலையில், கொரோனா உருவானதாகக் கூறப்படும் சீனாவில், அதன் தாக்கம் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சிங்கப்பூர் , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று உயர்ந்து வருகிறது.இந்தியாவிலும் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பால், ஆயிரத்து 10 பேர் சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில், 752 பேருக்கு அண்மையில் தொற்று உறுதியாகியுள்ளது.
குறிப்பாக ஒரே வாரத்தில் பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 430 பேர் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் 210 பேர், டெல்லியில் 104 பேர், தமிழ்நாட்டில் 69 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில், மக்கள் அதிகம் கூடும் கண்காட்சி, திருவிழாக்கள் போன்றவற்றில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள், குடிநீர், ஜூஸ் போன்றவற்றின் சுகாதார தன்மையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.




