குறைகிறது வீராணம் ஏரி நீர் மட்டம்!

Advertisements

காட்டுமன்னார் கோவில்:

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே பூதங்குடியில் தொடங்கும் வீராணம் ஏரி 14 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம் பரப்பில் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் முடிவடைகிறது.

அதிக நீர் பிடிப்பு ஆதாரமான வீராணம் ஏரியில் 47.50 அடி (1,465 மில்லியன் கன அடி) தண்ணீர் தேங்கி வைக்கப்படுகிறது.

சம்பா பருவ காலங்களில் காட்டுமன்னார் கோவில், குமராட்சி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இந்த ஏரிமூலம் பாசனம் பெறுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி முதல் கீழணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏரியின் அனைத்து மதகுகளையும் அடைத்து முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாத நிலையில் ஏரியின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்தது. தற்போதைய நிலவரப்படி 45.65 அடி தண்ணீர் உள்ளது.

வீராணம் ஏரியிலிருந்து பூதங்குடி நீரேற்று நிலையத்தில் மெட்ரோ நிறுவனம் வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீராக அனுப்பி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் ஏரியில் படிப்படியாகத் தண்ணீர் குறைய தொடங்கி உள்ளது.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் உள்ள நிலையில் ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் கோடையில் சென்னைக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்தை சமாளிக்க முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *