
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இரு நாடுகளின் கடற்படை கப்பல்களும் அவ்வப்போது ரோந்து சென்று வருகிறது.
நாடு தழுவிய அளவில் போர் சூழல் பதற்ற ஒத்திகையை பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள மாநிலங்களில், போர் ஒத்திகை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வரும் மே 7ஆம் தேதி அனைத்து மாநிலங்களும் போர் சூழல் பதற்ற ஒத்திகை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் மே மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .
அந்த சுற்றறிக்கையில் விமான தாக்குதல் நடைபெறும் போது ஒலிக்கும் அபாய ஒலி சைரனை ஒலிப்பது, முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் தளங்களை பாதுகாப்பது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போர் காலத்தின் போது எப்படி பாதுகாப்பாக இருப்பது உள்ளிட்ட போர்களின் ஒத்திகைகளை மேற்கொள்ள மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.54 ஆண்டுகளுக்கு பிறகு நாடு முழுவதும் நாளை பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது.
போர் காலத்தில் மக்களை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது, முக்கிய தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை எதிரி கண்ணில் இருந்து மறைக்க ஏற்பாடு செய்வது, இரவு நேரத்தில் எதிரி நாட்டு விமானங்கள் தாக்குதலில் ஈடுபடும் போது மின் விளக்குகளை அணைப்பது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைப்பது, தாக்குதல் நடந்தால் தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு துறை எப்படி செயல்பட வேண்டும் போன்ற ஒத்திகைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
