
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக இன்று அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை ( நவ.25ம் தேதி) தொடங்குகிறது. இந்தக் குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ம் தேதிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இதன்படி இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” மற்றும் வக்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும்நிலையில், அதானி மீதான அமெரிக்கா அதிகாரிகளின் லஞ்ச புகார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் வலைதளத்தில், “மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நாளை (நவ., 25-ம் தேதி) முதல் டிசம்பர் 20-ம் தேதிவரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் நாளை மறுநாள் (நவ.26-ம் தேதி) நாடாளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75-ம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்” என்று அதில் பதிவிட்டிருந்தார்.


