
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் என்பது பெரிதளவில் உருப்பெற்று வருகிறது. இந்தப் போரால் காசாவில் உள்ள அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2023 அக்டோபர் மாதம் இஸ்ரேல் படைகள் மீது ஹமாஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் மோசமான தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் வெடித்தது. காசாவில் உள்ள ஹமாஸை முழுமையாக அழிப்போம் என கூறி, இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காசா பகுதியிலேயே இஸ்ரேல் படை தொடர்ந்து இருக்கும் என்றும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் அப்படியே செயல்படுத்தப்பட்டால்.. பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலின் ஆதிக்கம் பெரியளவில் அதிகரிக்கும். ஏற்கனவே, அங்கு மனிதாபிமான நெருக்கடி நிலவும் சூழலில், அதை இன்னும் மோசமாக்கும். நேற்று இஸ்ரேலில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
காசா பகுதியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம் ஹமாஸை வீழ்த்த முடியும் என்று நெதன்யாகு அரசு நம்புகிறது. மேலும் இதனால் பல லட்சம் பாலஸ்தீனியர்கள் தெற்கு காசாவிற்கு தள்ளப்படுவார்கள்.இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், “காசாவை கைப்பற்றுவதும், அந்தப் பகுதிகளைத் தக்கவைத்துக்கொள்வதும் தான் தற்போதைய திட்டம்.. இதன் மூலம் மனிதாபிமான உதவிகள் ஹமாஸ் வசம் செல்வதும் தடுக்க முடியும். இது காசாவில் ஹமாஸின் செல்வாக்கைப் பலவீனப்படுத்தும். ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்துச் சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதேநேரம் ஒரே அடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் இறங்காது. இந்தத் திட்டம் படிப்படியாகவே செயல்படுத்தப்படும்” என்றார்.
