
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்கப்படுவது வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால், அரசுப் பொதுத்தேர்வுகள் மற்றும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு, ஏப்ரல் 17 ஆம் தேதி முதலே கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக, பள்ளிகள் திறப்பு 3 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு, ஜூன் 4-ஆம் தேதியான இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருந்தார்.
இதன்படி, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகையான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இதையொட்டி, பள்ளி வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளி நிர்வாகம் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.


