
துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான 12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிப் பெற்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான 12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில், நடந்த 5 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து, ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது. இந்தியா அணியின் தரப்பில் அரோன் ஜார்ஜ் அதிகபட்சமாக 85 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 41 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் ஹபீசா அஷான் அதிகபட்சமாக 70 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில், சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர்கள் தீபேஷ் தேவேந்திரன், கனிஷக் சவுகான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


