
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களமிறங்க ஆதரவு தெரிவித்து உள்ள முன்னாள் அதிபர் ஒபாமா, அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் எனக்கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோப்பைடன், 81, போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் போர்க்கொடி துாக்கினர். இதனால், போட்டியிலிருந்து ஜோப்பைடன் விலகினார்.
மேலும், கட்சியின் வேட்பாளராக, துணை அதிபர் கமலா ஹாரிசை நிறுத்த அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். அடுத்த மாதம், 19 – 22ல் சிகாகோவில் நடக்க உள்ள கட்சி மாநாட்டில், அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். கமலா ஹாரிசுக்கு கட்சியின் பல மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், முன்னாள் அதிபர் பரக் ஒபாமா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இது தொடர்பாக, ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜோப்பைடன் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்ததாக அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், டொனால்டு டிரம்பை, கமலா ஹாரிசால் வெற்றி கொள்ள முடியாது என்று, பரக் ஒபாமா நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது. இது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த வாரம், நானும், மிச்சலும், எங்களது நண்பர் கமலா ஹாரிசை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபராக அவர் இருப்பார். எங்களின் முழு ஆதரவை அவருக்கு வழங்கினோம். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவார். நாட்டின் முக்கியமான இந்தத் தருணத்தில், நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய எங்களால் முடிந்ததை செய்வோம். நீங்களும் இணைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

