
“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்” என்று இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர், தலைவர் பாரிவேந்தர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் இணைந்து பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதும் அவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்து வருகிறார். ஆனால் அவர் ஆரம்பத்திலிருந்து எப்போதும் திமுக உறுப்பினராக நாடாளுமன்றத்தில் செயல்படுவது இல்லை.
நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு ஆதரவாகவே அவர் செயல்பட்டு வருகிறார். அது மட்டுமில்லாமல் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இந்திய ஜனநாயக கட்சி, திமுக கூட்டணியில் இல்லாமல் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்தநிலையில் கடந்த 18-ம் தேதி அன்று டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பாரிவேந்தரும் கலந்து கொண்டார்.
அவர் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிந்த நிலையில் தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அவர் உறுதி செய்து இருக்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று பாரிவேந்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கு திமுக எந்த அளவிற்கு எதிர்வினை காட்டும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

