
சென்னை:தமிழகத்தில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிற நிலையில் மழையும் ஆங்காங்கே சில இடங்களில் பெய்து வருகிறது.
தமிழக வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக உள்ளது. ஈரோடு, கரூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடுவதால் தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-தென் மாவட்டங்களில் நாளை முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, கொடைக்கானல் மலை மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களிலும் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் 15-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 16,17 தேதிகளில் பலத்த மழை பெய்யும். திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும். கோடை மழை பல மாவட்டங்களில் பெய்ய தொடங்கி உள்ளதால், வெயிலின் தாக்கம் இயல்பான அளவைவிடக் குறைவாக இருக்கும். உள் மாவட்டங்களில் வெப்ப நிலை சற்று அதிகமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

