
11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை – வானிலை மையம் அறிவிப்பு !
சென்னை: வளி மண்டல சுழற்சி காரணமாக, சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில், இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. இது, அடுத்து வரும் நாட்களில் வலுவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு வங்கக் கடலின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, அடுத்து வரும் நாட்களில், படிப்படியாக வலுவடைய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஒருசில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், நாளைக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.


