
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று 70-வது பிறந்தநாள். தமிழகம் முழுவதும் அணைத்து மாவட்டங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், கமல்ஹாசன் ரசிகர்களும் பிறந்தநாளை கொண்டாடிவருகின்றார்கள். இதையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகளை வழங்கிக் கமல்ஹாசன் பிறந்தநாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமலஹாசனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் “பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! திரைக்களம் தொடங்கி அரசியல் களம்வரை முற்போக்கு-பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் -மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொண்டு சிறக்க விழைகிறேன்”! என முதலமைச்சர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மற்றும் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானியெனப் போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை.கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதவாத – பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்! என்று துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

