
குஜராத்தின் அகமதாபாத்தில் பன்னாட்டுப் பட்டத் திருவிழாவைப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜெர்மன் பிரதமர் பிரடரிக் மெர்சும் தொடங்கி வைத்துப் பார்வையிட்டனர். ஜெர்மன் பிரதமர் பிரடரிக் மெர்ஸ் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணமாக வந்துள்ளார்.
அவர் இன்று அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று பார்வையிட்டார். அவரைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு இருவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின் காந்தியின் படத்துக்குப் பருத்தி நூல் மாலை அணிவித்தனர். இராட்டையில் நூல் நூற்கும் நுட்பத்தை ஜெர்மன் பிரதமர் பார்வையிட்டார்.
அதன்பின் அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.இந்திய ஜெர்மன் பிரதமர்கள் சபர்மதி ஆற்றங்கரையில் பன்னாட்டுப் பட்டத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்துக்குச் சென்றனர். அங்குக் கலைநிகழ்ச்சிகளுடன்அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆற்றங்கரையில் உள்ள கட்டடத்தில் இருந்து பல வண்ணங்களில் பல வடிவங்களில் பறந்த பட்டங்களை இருநாட்டுப் பிரதமர்களும் கண்டுகளித்தனர். அதன்பின் இருநாட்டுப் பிரதமர்களும் பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.
திருவிழாவையொட்டி ஏற்பாடு செய்திருந்த கலைநிகழ்ச்சிகள், மல்லர் கம்பம் விளையாட்டு ஆகியவற்றையும் இருநாட்டுத் தலைவர்களும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.



