
32 வயது என நினைத்துத் திருமணம் செய்த தனது மனைவியின் வயது 40 எனத் தெரிய வந்ததும் 34 வயதான அவரது கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த 34 வயது நபருக்குக் கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. அப்போது அவரது மனைவியின் வயது 32 எனப் பெண் வீட்டார் கூறியுள்ளனர். அந்தப் பெண் 1991 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்ததாக அவரது பாஸ்போர்ட்டை பெண் வீட்டார் காட்டியுள்ளனர்.
இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை இல்லாததால் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது இயற்கையான முறையில் அப்பெண்ணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அப்பெண்ணிற்கு குறைந்தது 40 – 42 வயது இருக்கும் என்றும் மருத்துவ அறிக்கைகள் வெளியானது.
இதனைப் பார்த்ததும் அதிர்ச்சியான கணவர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலியான ஆவணம் கொடுத்து மோசடி செய்து திருமணம் செய்ததாகப் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அவரது மனைவி, மாமனார் மற்றும் உறவினர்கள் என 8 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

