
புதுடில்லி: வினேஷ் போகத் , ‛அப்பீல் ‘ மீதான தீர்ப்பு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது, சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளதாக அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 29. பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரீஸ்டைல் , 50 கிலோ பிரிவின் பைனலுக்கு முன்னேறினார். பைனலுக்கு முன் நடந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையைவிட 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சர்வதேச மல்யுத்த விதிமுறைப்படி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த விரக்தியில், மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
சர்வதேச ஒலிம்பிக், சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு( UwW) முடிவை எதிர்த்துச் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சிஏஎஸ்) அப்பீல் செய்த வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்குப் பிரான்சை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் உதவி செய்தனர். இந்தியாவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே மற்றும் விதுஷ்பாத் சின்ஹானியா ஆஜராகி வாதாடினர். முதலில், ஆக.,10க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிறகு ஆக.,13க்கும், தற்போது ஆக.,16ம் தேதியென 3 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது எப்படி வினேஷ் போகத்திற்கு சாதகமாக அமையும் என விதுஷ்பாத் சின்ஹானியா கூறியதாவது: எங்கள் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. வழக்கமாக சிஏஎஸ்.,க்கு 24 மணி நேரம் தான் கெடு உள்ளது. ஆனால் அவர்கள் தீர்ப்பை ஒத்திவைத்துச் செல்வது என்பது இந்த விவகாரத்தை அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டு உள்ளனர் என்பதையே காட்டுகிறது. இந்த விஷயத்தைப் பற்றி நீதிபதி சிந்திக்கிறார் என்றால், அது நமக்கு
நல்ல செய்தி.
கடந்த காலங்களில் சிஏஎஸ்.-டம் இருந்து சாதகமான தீர்ப்பு வருவது என்பது மிகக்குறைவு. வினேஷ் போகத் விவகாரத்தில் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பெரிய விஷயம் ஒன்று நடக்கும் என எதிர்பார்க்கிறோம். அவருக்காக வேண்டிக் கொள்கிறோம். பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


