
திருவள்ளூர்: ”கொலைக்குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும்; அந்தக் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதுதான் முக்கியம்” எனச் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடில் செய்தியாளர்களிடம் அப்பாவு கூறியதாவது: மத்திய அரசு அறிவித்த அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனையும் கிட்டத்தட்ட முடிந்தது. தமிழகத்திற்கு மட்டும் இன்னும் துவங்கவே இல்லை. மற்ற எய்ம்ஸ்., க்கு 3000 கோடி பணம் ஒதுக்கிக் கட்டுகின்றனர். ஆனால் தமிழகத்திற்கு மட்டும் கடன் வாங்கி கட்டுங்கள் என்கின்றனர். மெட்ரோ திட்டமும் கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்பித்தது; இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
அதேபோல், கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு இதுவரை அனுமதி கூடக் கொடுக்கவில்லை. கொலைக்குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும்; அந்தக் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதுதான் முக்கியம். தமிழகத்தில் அனைத்து குற்றங்களுக்கும் நடவடிக்கை எடுத்துக்கொண்டே தான் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



