
அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச்செயலாளர் பொறுப்பில் இருந்து நடிகை கவுதமி விலகியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற நான்குபேர் அந்தப் பதவியில் இருந்து விலகித் தவெகவில் இணைந்துள்ளனர். அதேபோல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராக இருந்த நடிகை கவுதமி, அந்தப் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமையகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இப்போதுள்ள அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு சமூகச் சேவை செய்ய ஏதுவாகக் கனத்த இதயத்துடன் அதிமுகவில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை தனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
ஏற்கெனவே பாஜகவில் இருந்த நடிகை கவுதமி, சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அதிமுகவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.



