
புதுடெல்லி:பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் புதிய ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதேசமயம், பா.ஜ.க. தனித்து 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் 52 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் வெற்றி எண்ணிக்கை இந்த முறை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி குறித்து எக்ஸ் வலைதளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
யார் உங்களை என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் நீங்கள் ஒருபோதும் பின்வாங்கவே இல்லை. உங்கள் நம்பிக்கையை அவர்கள் எவ்வளவு சந்தேகித்தாலும் நீங்கள் நம்பிக்கையை விடவில்லை. அவர்கள் பொய் பிரசாரம் செய்தாலும், நீங்கள் சத்தியத்திற்காகப் போராடுவதை நிறுத்தவில்லை.
அவர்கள் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெறுப்பை பரிசளித்தாலும்கூட கோபமோ அல்லது வெறுப்புணர்வோ உங்களை வெல்வதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லை.
உங்கள் இதயத்தில் அன்பு, உண்மை மற்றும் கருணையுடன் நீங்கள் போராடினீர்கள். உங்களை இதுவரை பார்க்க முடியாதவர்கள், இப்போது பார்க்கிறார்கள். ஆனால் எங்களில் சிலர் எப்போதும் உங்களைப் பார்த்து, நீங்கள் எல்லாவற்றிலும் துணிச்சலானவர் என்று அறிந்திருக்கிறோம். ராகுல் காந்தி பாய், உங்கள் சகோதரியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

