
பீகாரில் பாடலிபுத்திரத்தில் சிறப்பு ரயில் இயக்கக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் ரயில்களின் மீது கல்லெறிந்ததுடன், ரயில் நிலையத்தையும் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ரயில்நிலையங்களில் ஒன்று பாடலிபுத்திரம். நேற்றிரவு இங்கிருந்து போட்டித் தேர்வுகளை எழுதுவதற்காகப் பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்ட பிறகும் அவர்கள் சங்கிலியை இழுத்து ரயிலை மீண்டும் மீண்டும் நிறுத்தியுள்ளனர்.நள்ளிரவில் நடந்த தகராறு பற்றித் தகவல் அறிந்த பாட்னா மாவட்ட ஆட்சியர் தியாகராஜன் ஆயுதக் காவல்படையை அனுப்பிப் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார். காவல்படையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்கள் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்.ரயில் நிலையத்தில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளனர். பின்னர் வன்முறையாளர்களைக் காவல்துறையினர் அடித்து விரட்டினர். இதனால் அப்பகுதி போர்க்களம்போல் காட்சியளித்தது.
தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் பாடலிபுத்திரம் ரயில் நிலையத்தில் காவல்படை குவிக்கப்பட்டுள்ளது.இப்போது அவ்வழியாகச் செல்லும் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.



