
அரக்கோணம் அருகே நள்ளிரவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வீட்டில் இருந்து ஒரு தங்க கட்டி மற்றும் ரொக்கம் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம்,மற்றும் வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூர் இருளர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவுரி. இவர்களின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் நள்ளிரவு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சோதனை செய்ததில் ஒரு தங்க கட்டி மற்றும் ரொக்கம் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம், வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் பறிமுதல் செய்த தங்க கட்டியின் மதிப்பு பல லட்சம் என கூறப்படுகிறது. மேலும் தங்க கட்டிகள் மற்றும் பணம் பதுக்கி வைத்துள்ளார்களா என வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் இரவு முழுவதும் போலீசார் சோதனை செய்தனர்.
இருளர் இனத்தைச் சேர்ந்த முருகன் அவரது மனைவி கௌரி ஆகியோர் அரக்கோணம் மசூதி தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் தண்ணீரில் மண்ணை சலித்து அதிலிருந்து வெள்ளி துகள்கள் பிரித்தெடுக்கும் போது தங்க பிஸ்கட் சிக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

