
திருமலை : தெலங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில் உள்ள வாஜேடு அடுத்த சிக்குபள்ளி என்ற இடத்தில் ‘நயாகரா’ நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் மழைக்காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அந்த நேரத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து தங்களது குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த நீர்வீழ்ச்சி அம்மாநிலத்தில் ‘நயாகரா’ என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த நீர்வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாறைகளின் மேல் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று இந்த அழகை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர். மேலும், இதனை செல்போனில் வீடியோ, போட்டோக்களை எடுத்து மகிழ்ச்சியுடன் குளித்தனர்.

