
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கவுண்டமணி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் தனி முத்திரை பதித்தவர் கவுண்டமணி. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு கடந்த 2015-ம் ஆண்டு அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘49-O’ படம் வெளியானது. தொடர்ந்து ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘வாய்மை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் 2016-க்குப் பிறகு அவர் எந்தப் படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஷஷி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட நகைச்சுவை நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். சிங்கமுத்து மகன், நாகேஷ் பேரன் மற்றும் மயில்சாமி மகன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.


