பீரோ தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து!

Advertisements

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலையிலிருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் முத்துராஜ் (வயது 50) என்பவர் இரும்பு பீரோ, கட்டில் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார்.

பொங்கல் பண்டிகையையொட்டி பீரோ கம்பெனிக்குக் கடந்த சில தினங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அந்தப் பீரோ கம்பெனியில் இன்று காலைப் பெயிண்ட் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து கரும்புகை வெளி வந்தது.

இதனை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சில நிமிடங்களில் தீ மளமளவெனப் பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது.

பொதுமக்கள் கம்பெனியில் தீப்பற்றி எரிவதை பார்த்துத் தங்கள் வீடுகளுக்கும் தீப்பரவி விடுமோ என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்துத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீத்தொடர்ந்து கொளுந்துவிட்டு எரிந்ததால் பெரும் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு ஒரு வழியாகத் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இருந்த போதும் கம்பெனியில் இருந்த பெயிண்ட், பீரோ, கட்டில், தளவாட பொருட்கள் எனப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியது. தீ விபத்துக்கான காரணம்குறித்து சின்னாளபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *