
புதுடில்லி: ‘கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும்’ எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடில்லி விஞ்ஞான் பவனில், பாலியை செம்மொழியாக அங்கீகரிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உலகத்தைச் சிறந்த இடமாக மாற்றுவதற்கான திறவுகோல் இரக்கமும் நல்லெண்ணமும் தான். கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும். பாலி மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கி உள்ளது. இது புத்தரின் மரபுக்குக் கிடைத்த கவுரவம்.
புத்தபெருமானை பின்பற்றும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று புனிதமான நாள். பாலி மொழியை வாழ வைப்பதும், புத்தபெருமானின் வார்த்தைகளை உயிர்ப்பிப்பதும் நம் அனைவரின் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பை எங்கள் அரசாங்கம் மிகவும் பணிவுடன் நிறைவேற்றியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். புத்தரின் போதனைகள் மனித குலத்தின் நலனுக்கான அசைக்க முடியாத உறுதியாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

