EPS Vs Kamal: மக்கள் நீதி மய்ய முக்கிய நிர்வாகியைத் தூக்கிய அதிமுக!

Advertisements

பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் ஐடி பிரிவு மாநில செயலாளர் கிருபாகரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்கக் கூட்டணி மாறுவது ஒரு பக்கம் என்றால், மறு பக்கம் சீட் கிடைக்காத விரக்தியில் மாற்றுக்கட்சியில் முக்கிய நிர்வாகிகள் சென்று சேரும் சம்பவமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுசில கட்சிக்கும் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இணையும் தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேர் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பாஜகவில் கட்சி பணியாற்றி வரும் நடிகை கவுதமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இதனையடுத்து பாஜகவின் தென் மாநில சிறுபான்மை அணி பொறுப்பாளர் பாத்திமா அலியும் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இந்தப் பரபரப்பான நிலையில் நடிகர் கமல்ஹாசன் கட்சியின் சமூகவளைதளம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் கிருபாகரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *