
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதனைக் கண்டதும், “வண்டியில் ஆள் இருக்கா இல்லையா” எனக் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி ஆவேசம் அடைந்தார்.
ஒவ்வொரு முறை நான் பிரச்சாரம் செய்யும்போதும், இடையில் ஆம்புலன்ஸ் விடுகிறது இந்த கேவலமான அரசு. அந்த ஆம்புலன்ஸில் ஆளே இல்லை. இதுவரை 30 கூட்டங்களில் இப்படி நடந்திருக்கிறது. அடுத்த முறை ஆம்புலன்ஸில் நோயாளியை ஏற்றிக்கொண்டு வரவேண்டும். அடுத்த முறை இப்படி வந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டி வரும் ஓட்டுநரே நோயாளியாக மருத்துவமனைக்கு போக வேண்டிய நிலை வரும்” என பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் மொத்தம் 1,330 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி தனக்கு ஆதரவு திரட்டி பிரதான சாலைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் ஆம்புலன்ஸ்கள் வரும் வழியில் கூட்டத்தைப் போட்டுவிட்டு, தான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் விடுகிறார்கள் என சொல்லியுள்ளார். இது தவறானது. மருத்துவத் துறை ஊழியர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
அவர் இத்தோடு அவற்றை நிறுத்திக்கொள்வது நல்லது. அவருக்கு இதுவெல்லாம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தும்.இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட பெண்மணியை அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் இருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர் அழைத்துச் சென்ற போது ஈபிஎஸ் பரப்புரைக் கூட்டத்தில் வாகனம் சிக்கியதாகத் தெரிவித்துள்ளது.

