
புலம்பெயர் மேற்குவங்க தொழிலாளர்கள் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்பும் வகையில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாதம் ரூ. 5,000 உதவித்தொகையுடன் கூடிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “புலம்பெயர்ந்த மேற்குவங்க தொழிலாளர்கள் மீண்டும் மாநிலம் திரும்பினால், மாதம் ரூ. 5,000 மறுவாழ்வு உதவித்தொகை அவர்களுக்கு வழங்கப்படும். மேலும் அவர்களின் திறன்களின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக மேற்குவங்கத்தினர் மீது மொழி ரீதியாக தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அவர்கள் சிறைப்படுத்தப்படுவதாகவும், அதுவும் பாஜக அல்லது என்.டி.ஏ. ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இவை நடப்பதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை மேற்குவங்க ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் முன்வைத்து வருகிறது.
இந்தச் சூழலில், புலம்பெயர்ந்துள்ள மேற்குவங்க தொழிலாளர்கள் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்பினால், அவர்களுக்கு மாதம் ரூ. 5,000 மறுவாழ்வு உதவித்தொகை, அவர்கள் திறன்களுக்கு ஏற்றபடி வேலை பயிற்சி, அவர்கள் குழந்தைகளுக்கான கல்வி ஏற்பாடு உள்ளிட்ட ஏராளமான அறிவிப்பை முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

